Business

பல கோடி நஷ்டம்.. கலக்கத்தில் பேடிஎம் நிறுவனம்! – agninews.co.in

பேடிஎம் நிறுவனத்துக்கு ரூ.780 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்திய டிஜிட்டல் பரிவர்த்தனை சந்தையில் சேவை வழங்கி வரும் பேடிஎம் நிறுவனம், 2016ஆம் ஆண்டில் ரூபாய் நோட்டுகளுக்கு தடை செய்யப்பட்ட பிறகு அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கத் தொடங்கியது. அதன் லாபமும் அதிகரித்தது. ஆனால் சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் பேடிஎம் நிறுவனத்துக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேசன், சென்ற அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் ரூ.780 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. முன்னதாக ஜூலை – செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.461 கோடி இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், அடுத்த காலாண்டிலேயே இந்த இழப்பு கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துவிட்டது. 2020 அக்டோபர் – டிசம்பர் காலாண்டிலும் பேடிஎம் தாய் நிறுவனத்துக்கு ரூ.519 கோடி இழப்பு ஏற்பட்டிருந்தது.

நிறுவனத்தின் வருவாயைப் பொறுத்தவரையில் 89 சதவீத வளர்ச்சியுடன் ரூ.1,456 கோடி கிடைத்துள்ளது. வணிகர்களின் அதிகமான பேமெண்ட், பேடிஎம் ஆப் மூலமாக அதிகமான அளவில் கடன் விநியோகிக்கப்பட்டது, ஆன்லைன் வர்த்தகச் சந்தையின் வளர்ச்சி போன்ற காரணங்களால் நிறுவனத்தின் மொத்த வருவாய் உயர்ந்துள்ளதாக பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.