Economy

கோவையில் பண ஆசையை தூண்டி ரூ. 300 கோடிவரை மோசடி – என்ன நடந்தது?

கோவையை மையப்படுத்திய ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் ஒன்று ரூ.300 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோவையைச் சேர்ந்த விமல் குமார் என்பவர், Mr. Money என்கிற யூடியூப் சேனலை கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வந்தார். இதன் மூலம் அன்னிய செலாவணி, பங்குச் சந்தை, க்ரிப்டோகரன்சி ஆகியவற்றில் முதலீடு செய்வது தொடர்பாக கல்வியும், பயிற்சியும் வழங்குவதாக அதில் தெரிவித்துள்ளார். இவரது யூடியூப் சேனலை 1,53,000 பின் தொடர்கின்றனர்.

இதன் மூலம் Mr. Money மற்றும் Alphaforexmarket என்கிற இரண்டு திட்டங்களில் முதலீடு செய்ய மக்களிடமிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக ரூ.300 கோடி வரை வாங்கிவிட்டு உறுதியளித்த லாபத்தையும் முதலீட்டையும் மக்களுக்கு திருப்பி தராமல் ஏமாற்றுவதாக தமிழ்நாடு முழுவதும் பலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தின் காளப்பட்டியில் இயங்கி வந்த விமலின் அலுவலகம் தற்போது மூடப்பட்டிருப்பதாகவும் கடந்த நான்கு மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். விமல் குமாரும் அவருடைய மனைவி ராஜேஷ்வரியும் தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் மக்களை நேரில் சந்தித்தும் இணையம் மூலமாகவும் விமல் குமார் பணத்தை வசூல் செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு ஆதாரங்களையும் முன்வைக்கின்றனர்.